கருவாளிப் பூனை

கருவாளிப் பூனை
கருவாளிப் பூனை

Friday, December 31, 2010

மகிழ்ச்சி

அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி என்பதை புள்ளியாக பார்ப்பதா, வட்டமாக பார்ப்பதா?

புள்ளியாக பார்த்தால் உண்டு, இல்லை என இரண்டில் ஒரு பதில் கிடைக்கும்; வட்டமாக பார்த்தால் விட்டத்தைப் பொறுத்து வேறுபடும். ஆனால் அது ஒரு வட்டமாகவே இருக்கிறது. நல்லது, கெட்டது, நன்மை, தீமை, தவறு, சரி போன்று.

ஒரு மனிதன் அவன் அவனாகவே, தன்னிலை கொண்டு மகிழ்வது எக்காலங்களில்?

தன்னிலை என்பது எதை குறிக்கும்?
என் மூளை சுருக்கங்களில் ஒன்று இதற்கு பதிலாக,   மனையாள் வரும் போதே அந்நிலை அழிபடுகிறது என்கிறது.

மனையாள் என்பது மனைவியை மட்டுமன்றி, மனதை ஆளும் அனைத்தையும் குறிக்கட்டும். தன்னிலை எனும் அந்நிலை இழந்த எவனும் முழுவதுமாக மகிழ்வதாக நான் ஒப்பவில்லை.

ஆனால் அவன் மகிழ்ச்சி என அவளுடன் அல்லது அவற்றுடன் கொண்டாடுவதையே விரும்புபவனாக இருக்கும் பட்சத்தில்? இந்த கேள்வி பெண்களுக்கான அந்த கேள்விக்கு பதிலாகிறது. பெரும்பாலும் பெண்கள் இந்த நிலைப்பாட்டுக்கே வருகிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ பெண்கள் பிறருடன் கொண்டாடுவதையே அவர்களது கொண்டாட்டமாக கொள்கிறார்கள்.

ஆண்களைப் பொறுத்த வரை அது இல்லை.  அவர்கள் கொண்டாடுவதே இல்லை; காரணம், பெண்கள் மனம் எளிதில் திசை மாறும்; ஆண்கள் பெரும்பாலும் அந்தந்த நேரத்திற்கான உணர்ச்சிகளுக்கு அடிமையானவர்கள். உடனுக்குடன் எதிர்பார்ப்புகள் இருக்கும் அவர் எண்ணங்கள் மற்றும் செயல்களில். இதனால் பெரும்பாலான நேரங்களில் கொண்டாட்ட மன நிலை இருப்பதே இல்லை.

ஒரு விஷயம் நடக்க வில்லை எனக் கவலைப்படும் ஆண்கள் கூட்டம், அந்த நிலையை, அந்த உணர்வை கடக்கும் பட்சத்தில் உலகை, பணத்தை, உணர்வை, பெண்களை கண்டுகொள்ளாத முழு வளர்ச்சி அடைகிறார்கள்.

ஆக மகிழ்ச்சியை நோக்கி எளிதில் திசை மாறி பயணம் செய்யும் பெண்களே மனதைப் பொறுத்த வரை முதிர்ந்தவர்கள் என்பது என் தனிப் பட்டக் கருத்து.

இந்த வரிசையில் பெண்களை வைக்கும் நான் உணர்ச்சி எனும் கடலை கடக்க முடியாத சாதாரண ஆணாகவே இருக்கிறேன்.

அந்நிலையில் கடக்கும் ஆண் மதியாளன், சுயபுத்தி உடையவன், விஞ்ஞானி என தன்னுள் உள்ளவற்றை உணர்ந்தவனாகிறான்.
அடிமையாகாமல் அதை ஆட்கொள்ளத் துவங்குகிறான்

அந்த உணர்ச்சிக் கடலைக் கடக்க துவங்காத கைக்குழந்தைகள், தன் நிலையில் நிறைவு காணும் மனம் கொண்டவர்கள், நிலையே அறியாத நினைவு பிறழ்ந்தவர்கள் மட்டுமே உண்மையாக குறையில்லாமல் மகிழ்கிறார்கள்.

இந்த ஆண்டு இனிய ஆண்டாக, விரும்பிய அனைத்தும் பெற்று மகிழ்ச்சியடைய வாழ்த்துக்கள்.    

என்னையும் எழுத முயல்பவனாக, என்னுள் பல மாற்றங்களை, திருப்பங்களை விதைத்த  2010 மறக்க முடியாத ஆண்டு.

Monday, December 27, 2010

வெளியேற்றம் - யுவன் சந்திர சேகர்

ஒரு நாவல் படித்து முடிக்கும் போது நாவலைப் பொறுத்து நமது உணர்வுகள் வேறுபடுகிறது. சில நாவல்களால் சந்தோசம் ஏற்படுகிறது, சில நாவல்களால் படிப்பினை (வார்த்தை விளையாட்டு), சில நாவல்களைப் படிக்கும் போது சிந்தனை விரிகிறது; அதாவது மூளையில் சுருக்கங்கள் அதிகமாகிறது. இவை அனைத்தையுமே ஒரே நாவல் தரும் போது அது கிட்டத்தட்ட பைபிள், கீதை ஆகிறது.


நாவல்களைப் படிக்க ஆரம்பித்தது அனைவரும் போல ராஜேஷ் குமாரிலிருந்து. பின்னர் நண்பனின் உதவியால் பலர் அறிமுகமானார்கள்; அந்த பட்டியல் மிகவும் பெரிதானது. வாழ்க நட்பு!!

தற்போது கிட்டிய தூரத்தில் எனக்கு யுவன் சந்திர சேகரையும் அவனே அறிமுகப் படுத்தினான்.

அதில் பகடையாட்டம், மணற்கேணி, வெளியேற்றம் படித்தாகி விட்டது. முதலிரண்டும் மனம் கவர்ந்தவை; மூன்றாவது என்னை இதை எழுத தூண்டியது.

ஜெயமோகன் படிக்கும் போது ஒரு மயக்கம் வந்தது; வார்த்தைகள் தந்த மயக்கம். இப்படியும் சிந்திக்கலாம் என்பதன் துவக்கம்; அதுவே யுவன் தனது எழுத்தைப் படிக்கும் போது அது ஒரு மாயை என்றே தோன்றும் அளவு, யதார்த்தமான வார்த்தைகளில் தீவிரமான சிந்தனைகள்.

ஜெயமோகனின் சிறப்பாய் நான் உணர்வது, துவக்கத்தில் இருந்த மயக்கத்தை நாவலின் இறுதி வரை தந்து கொண்டிருப்பார். யுவனின் கடைசி பக்கங்கள் என்னைக் கவர வில்லை. (சங்கமம் எனும் தலைப்பில் எழுதப் பட்ட முடிவு).

ஆனால் இவரது சிந்தனை வரிகள் என்னைத் திகைக்க வைத்து அதை STD செய்து நண்பனுக்கு வாசித்து மகிழும் அளவு இருந்தன. ஆரம்பத்தில் இருந்த சிந்தனை இறுதி வரை இருந்தது; தீவிரம் மட்டுமே குறைந்தது என்பது என் கருத்து.

மனிதன் லௌகீக வாழ்க்கையிலிருந்து விடுபட்டு நீரோட்டமாய் வெளியேறுவதை தலைப்புகளின் கீழ் கொணர்ந்து ஊற்று, புனல், சங்கமம் என முறையே எண்ணம், வெளியேற்றம், முடிவுக்கு தொடர்பு படுத்தி உள்ளார்.

இந்த வெளியேற்றம் லௌகீக வாழ்க்கையிலிருந்து வெளியேற்றம் எனப் பொது அர்த்தம் கொண்டாலும்; மனதளவில் நான் பேசும் போது என் சிந்தனை என் வார்த்தைகளைக் கேட்கும் நிமித்தம் என்னிலிருந்து என்னை வெளியேற்றி காண்பதைக் குறிப்பதாக நான் கண்டேன்;

பாத்திரப் படைப்பில் கூரிய கவனிப்பில் வியந்தேன், முழு தமிழ்நாட்டையும் அந்த இட மொழி நடையுடன் நாடகத் தன்மை கொடுத்து படைக்கும் போது படிக்கும் ஆர்வம் கூடுகிறது.

உவமைகள் அந்தந்த பகுதியை பிரதிபலிப்பது, வெளியேற்றம் மீதிருந்த அவரின் தாகத்தை வெளிப் படுத்துகிறது.

சிறந்த வரிகளை எடுத்துக் கூற விழையும் பட்சத்தில் நாவலைப் பிரதி எடுக்க வேண்டி வரும் எனும் அச்சத்தால் அந்த முயற்சியைக் கை விடுகிறேன். நான் வியந்த அனைத்து விசயங்களையும் எழுதவில்லை.

வெளியேற்றம் நாவல் இரண்டு முறை படித்து முடித்து விட்டேன்; சிறந்த நாவல்களில் இதுவும் ஒன்று. படித்து மகிழ பரிந்துரைக்கலாம்.